Saturday, April 25, 2015

துளசி / துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி



துளசியின் சிறப்பு
பூஜைக்குரிய இலைகளில் துளசி சிறந்தது. இதுவொரு தெய்வீக மூலிகையுமாகும். நீருள்ள நிலத்தில் மட்டுமல்ல; வறண்ட பூமியிலும் வளரும் தன்மையுடையது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய தனிச்சிறப்பு மிக்கது. காக்கும் கடவுள் திருமால் உறையும் ஆலயங்களில் தலத் தாவரமாக துளசி விளங்குவதைக் காணலாம். கருந்துளசி, பெருந்துளசி, ராமதுளசி, கிருஷ்ணதுளசி, சிவதுளசி, வனதுளசி, சிறுதுளசி என இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் துளசி காணப்படுகிறது. கருந்துளசியே உயர்ந்த பலன் தரவல்ல தென்பர். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணம்கொண்ட துளசியை தமிழில் “திருத்துழாய்’ என்று வைணவ அடியார்கள் போற்றுவர்.
சமஸ்கிருதத்தில் காரணப்பெயர்களாக பலவுள்ளன. சாறுடையதாகையால் சரசா, எங்கும் எளிதில் கிடைப்பதால் சுலபா, பல பூங்கொத்துகளைக் கொண்டதால் பகுமஞ்சரி, விஷ்ணுவுக்கு உகந்ததாகையால் விஷ்ணுவல்லபா- விஷ்ணுப்ரியா, அதிக இதழ்கள் கொண்டதால் பகுபத்திரி, கிருமிகளையும் துயரங்களையும் போக்குவதால் அபேராக்ஷஸி, வயிற்றுவலியைப் போக்குவதால் சூலக்னி, இதன் அடிமண் எப்போதும் புனிதமுடையதென்ப தால் பவானி, ராம- கிருஷ்ணர் களின் அன்பைப் பெற்றதால் ஹரிப்ரியா என பலவாறு துளசி போற்றப் படுகிறது.
துளசி இலையின் சாறானது ஜலதோஷம், கபம், வயிற்று உளைச்சல், எலும்புச்சூட்டு ஜுரம், தாகம், மாந்த ஜுரம் போன்றவற்றைப் போக்கும். நாவில் ருசியற்ற தன்மையை மாற்றும். குழந்தை முதல் பெரியவர் வரை சளியை நீக்கி, நன்கு சுவாசித்து ஆரோக்கியம் பெற உதவும் உன்னத மூலிகை துளசியாகும். துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் பாவங்கள் நீங்குமென்பர். தீயவர்களின் கண்பார்வை அகலும். தீய எதிரிகளின் பில்லி, சூன்யம் போன்ற ஆபிசார ஏவல்கள் துளசி இருக் கும் இடத்தை அணுகாது. துர் தேவதைகள் விலகியே நிற்கும்.
இத்தகைய துளசியை பூஜைக்காகப் பறிக்கும்போது, கொத்து கொத்தாகப் பறிக்கக் கூடாது. ஒவ்வொரு இலையாகப் பறிக்கவேண்டும். பூவை ஒரு ஈர்க்கு அளவே பறித்துப் பயன் படுத்த வேண்டும். குளித்து தூய்மையாக இருக்கும்போதே பறிக்கவேண்டும். மாலை நேரம், இரவு நேரம், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, புண்ணியகாலம், சிரார்த்த திதி ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக்கூடாது. அதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்தாலும், பூஜித்திருந்தாலும் நீரால் கழுவி மீண்டும் பூஜிக்கத்தக்க சிறப்புடையது துளசி.
துளசி நீரைப் பருகுபவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்களென்பது உறுதி. கணவனைப் பெறவிரும்பும் பெண்களும், பதிவிரதாதன்மை நிலைத் திருக்கவும் தினமும் காலையில் தலைக்கு குளித்து, துளசி செடிக்கு மஞ்சள் நீரூற்றி வலம்வந்து வணங்கினால் எண்ணியது ஈடேறும். துளசியை மங்களதேவியின் அம்சமாகக் கருதி வழிபடவேண்டும். துளசியின் அடிப்பகுதியில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், நடுவில் எல்லா தேவதைகளும், முனைகளில் அனைத்து வேதாகம சாஸ்திர வித்தைகளும் இருப் பதாலும்; மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளாக இருப்பதாலும் அனைவராலும் பூஜிக்கத்தக்கவள் துளசி.

துளசி துதி
யன்மூலே ஸர்வதீர்த்தானி
யன்மத்யே ஸர்வதேவதா:
யுதக்ரே ஸர்வவேதாஸ் ச
துளசீம் தாம் நமாம்யஹம்.
நமஸ் துளசி கல்யாணி
நமோ விஷ்ணுப் பிரியே சுபெ
நமோ மோக்ஷப்ரதே தேவி
நமஸ் ஸம்பத் ப்ரதாயிகே.
துளசி பிரார்த்தனை சுலோகம்
நமஸ்தே துளசீதேவி
சர்வாபீஷ்ட பலப்ரதே
நமஸ்தே திரிஜகத் வந்தியே
நமஸ்தே லோகரக்ஷிகே.
மேற்கண்ட துதிகளைக்கூறி துளசியை போற்றிவணங்குவோர் விரும்பியவற்றையெல்லாம் அடைவர் என்பது ரிஷிகளின் வாக்கு. சைவ- வைணவ ஆகமங்கள் யாவுமே, எல்லா தெய்வங்களுக்குரிய சிறப்பு பத்திரமாக துளசியைக் குறிப்பிட்டுள்ளன. விநாயகர் துளசி தேவியை தாயின் அம்சமாகக் கருதுவதால், தினசரி பூஜையில் விநாயகருக்கு துளசியை சமர்ப்பிக்கக்கூடாது. ஆவணி மாத மகாசதுர்த்தி மற்றும் உற்சவ அலங்காரம் போன்ற சிறப்பு காலங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.
சிவாகமங்களும் சிவபூஜையில் துளசிக்கு திங்கட்கிழமைக்குரிய சோமவார பத்திரம் எனும் சிறப்புத் தகுதியை அளித்துள்ளன. சைவாகமங்கள் வில்வத்திற்கு இணையாக துளசியையும் குறிப்பிட்டுள்ளதால், இதன் மகிமையை உணர்ந்து பயன்படுத்தவேண்டும். அதுபோல வில்வத்தால் விஷ்ணுவை வழிபடுவதும் சிறப்பாகும்.
இனி, பூஜைக்காக கொய்துவரும் மலர்களை சேமித்துவைக்கும் காலத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். தாமரை மலரை ஐந்து நாட்களும், அலரிப்பூவை மூன்று நாட்களும், வில்வத்தை ஆறு மாதங்களும், துளசியை மூன்று மாதங்களும், தாழம்பூவை ஐந்து நாட்களும், கருநெய்தல் என்னும் நீலோத்பலத்தை மூன்று நாட்களும், செண்பகத்தை ஒருநாளும், விஷ்ணு கிராந்தியை மூன்று நாட்களும், மஞ்சள் நிற விலாமிச்சம் வேரை ஓராண்டு வரை வைத்திருந்து  உரியமுறையில் உபயோகிக்கலாம். பூஜைக்கு பூ இல்லையெனில், அவ்வூரில் வாழும் அனைவருக்கும் சங்கடம் நேரும் என்கிறது ஆகமம். புதிய பூக்களும் மணம்மிக்கவையும் மிகவும் பயன்தருவன.
விரும்பத்தக்கவற்றை விளக்கும் ஆகமங்கள் விலக்கத்தக்கதையும் வலியுறுத்துகின்றன.
தனது வெறுங்கையில் சேர்த்துவைத்துக் கொண்டுவந்தது, துணியில் வைத்துக் கொணர்ந்தது, ஆமணக்கு, எருக்கு போன்ற இலைகளில் வைத்துக் கொணர்ந்தது போன்றவை விலக்கத்தக்கதாகும். இவை நாம் முன்னர் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் அனைத்தையும் போக்கிவிடும்.
மேலும், தாம் உடுத்திய துணியில் வைக்கப்பட்டவை, வாசனை இல்லாதவை, தலைமுடி, புழு, பூச்சி, நோய் இவற்றால் நிந்தனைக்கு ஆட்பட் டவை, அளவுக்கு மீறிய மணமுள்ளவை, அழுக்கடைந்தவை, அசுத்தமானவை, தூய்மை யில்லாத நிலையில் உள்ளவர்களால் தொடப்பட்டவை, பூசித்த பழைய நிர்மால்யத்தின்மீது விழுந்தவை, மனிதன், கால்நடைகளால் முகரப்பட்டவை, வாடியவை, மொட்டாகப் பறித்து தன்னால் மலரச் செய்தவை, தூய்மையற்ற பாத்திரத்தில் சேமித்துக்கொண்டு வந்தவை, குளித்துவிட்டு ஈரத்துணியுடன் பறித்துக்கொண்டு வந்தவை, பிறரிடமிருந்து விரும்பி யாசித்துப்பெற்றவை, எடுத்துவைத்து உலர்ந்து போனவை போன்ற மலர்களும் விலக்கத்தக்கவை.
நிலத்தில் விழுந்திருந்தவை, வாடிவதங்கி அழுகியவை, பக்குவமடையாத சிறுமொட்டு, கொத்தாக உள்ளவை, தகாத இடத்தில் இருந்தவை, வியாதியுள்ளவர்களால் பறிக்கப்பட்டவை, நறுமணமிருந்தும்கூட புனிதத்தன்மையற்றவை, ஒரே நிறம் மட்டுமே உள்ளவை, பூக்காத மொட்டுக்களாக உள்ளவை ஒருபோதும் பூஜைக்கு ஏற்றுக்கொள்ளத்தகாத- விலக்கிடத்தக்கவையே ஆகும்.
நறுமணமே இல்லாதபோதும், தர்ப்பைப்பூ முதலிய சில பூக்கள் என்றும் புனிதமாய் விளங்குவதால் ஏற்கத்தக்கவையே என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன. புஷ்பவிதிமுறைகள் யாவும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். கடைப்பிடிக்கத் தவறினால்,இயல்பாகவே மாசற்ற பரம் பொருளிடம், மாசை சேர்த்திட்ட குற்றம் புரிந்தவராகிவிடுவோம். எவ்வாறெனில், சுத்தமான சிவத்தை, நாம் அசுத்தமாயுள்ள பத்திர புஷ்பங்களின் சேர்க்கையால் மாசுபடுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை.
பூவின்றி அமையாது பூஜை. ஆயினும், அப்பூக்கள் கூறப்பட்ட வகை, நிறம், குணம், தரம், மணம் உள்ளவைகளாய் இருத்தல் மிகவும் அவசியம். உரிய வகையும், மணமும் பெற்றிருந்தாலும்கூட, அவை குற்றம், குறை தோஷமின்றி இருத்தல் மிகவும் அவசியம். எனவே, விலக்கத்தக்கவை பற்றிய விதிமுறையை முதலில் முற்றிலும் பொருத்திப் பார்த்து சோதித்திடவேண்டும்.
பொதுவாக மலர்களை அதற்கென உரிய தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தில் மட்டுமே பறித்து சேமித்திடவேண்டும். பின்பு பூஜைக்குரிய புஷ்ப பாத்திரத்தில் வைத்து சமஸ்காரத்தால் புனிதமாக்கி, அப்பூவை சோபை உள்ளவரை கையாளவேண்டும். பூஜையில் செண்பகப்பூவின் மொட்டுகள் மட்டுமே, மொட்டாக சாற்றக்கூடியவை. மற்ற மலர் வகைகளின் மொட்டுகளை ஒருபோதும் சாற்றக்கூடாது.
சுத்தமான உலோகம் அல்லது மரத்தாலான பாத்திரத்திலோ, தென்னை இலைக்கீற்றால் பின்னிய பூக்குடலை அல்லது மூங்கில் கூடைகளில் பூப்பறித்து சேமிப்பது முறையாகும்.

----------------------------------------------------
4448 நோய்கள் குணமாக்கும் துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.
1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
குணமாகும் வியாதிகள்.
1.உண்ட விஷத்தை முறிக்க.
2.விஷஜுரம்குணமாக.
3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5.காது குத்துவலி குணமாக.
6.காது வலி குணமாக.
7.தலைசுற்றுகுணமாக.
8.பிரசவ வலி குறைய.
9.அம்மை அதிகரிக்காதிருக்க.
10.மூத்திரத் துவாரவலி குணமாக.
11.வண்டுகடி குணமாக.
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16.அஜீரணம் குணமாக.
17.கெட்டரத்தம் சுத்தமாக.
18.குஷ்ட நோய் குணமாக.
19.குளிர் காச்சல் குணமாக.
20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
மற்றும் பல..
முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இத் துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை பீடித்துக்கொன்டுதான் இருக்கின்றது.சாகரம் பல விடயங்களைப் பகிர்ந்தாலும் இந்த துளசி நீரின் மகிமையையும் செய்முறையையும் இங்கே தரப்படுவதால் நோயற்ட வாழ்க்கையின் ரகசியத்தை தெரிந்துகொள்ளலாம். துளசி நீர் செய்யப்படும் முறை 1.சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும். 2.அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விடவும் . 3.ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும் . 4. இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும். 5. இவ்வாறு 48 நாட்கள் பருகினால். இதனால் 4448 நோய்கள் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும் இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்
இத்தகைய புனிதமான செடியை செழிப்பாக வளர்ப்பதற்கு, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
* துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.
* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.
* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.
* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.
* துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். இவையே துளசி செடியை வளர்ப்பதற்கான சில டிப்ஸ். வேறு ஏதாவது டிப்ஸ் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------
மேலும் சில மருத்துவ குறிப்புகள்....(முன்பே சொல்லப்பட்டிருந்தாலும் சற்று விளக்கமாக)
குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க
துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.
துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.
பெண்களுக்கு
துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.
ரத்த அழுத்தம் குறைய
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
உடல் எடை குறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.
அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
துளசி இலை – 9 எண்ணிக்கை, கடுக்காய் தோல் – 5 கிராம், கீழாநெல்லி – 10 கிராம்,ஓமம் -5 கிராம், மிளகு – 3 ஆகியவற்றை எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.
தொண்டைக்கம்மல், வலி நீங்க
தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.
10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.
சிறுநீரகக் கல் நீங்க
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க
கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.
வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.
மன அழுத்தம் நீங்க
மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர
துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
தலைவலி தீர
ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
கண்நோய்கள் தீர
துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.
சரும நோய்கள் நீங்க
தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

No comments:

Post a Comment